ப்ரீத்தி
வீடு ஒரே பரபரப்பா இருந்தது.. இதுக்கு முன்னால இந்த வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப்போ, இப்படி தான் ஆளாளுக்கு சுத்திட்டு இருந்தாங்க. என் தலை எழுத்து படி வழக்கம் போல அடுப்பங்கரையிலும் பாத்திரம் தேய்க்கிற இடத்தலையுமே விதிசிச்சிருக்கு எனக்கு
அன்னைக்கே ஒரே தடபுடல் சமையல் தான்.. அடுப்படில வடிச்சு கொற்ற நமக்கு தெரியாதா... எத்தனை முறை சமைச்சு சமைச்சு குடுத்தாலும்.. ஒரு வார்த்தை," சாப்டியா, நீ?" னு கேக்க நாதி இருக்கா இந்த வூட்ல.. எல்லா என் விதி.. என்ன இங்க காசுக்கு ஆசைப்பட்டு வித்துபூட்டான் அந்த குமாரசாமி முதலியார்..
பேருக்கு தான் அந்தஆளு பெரிய மனுஷன்.. மத்தபடி கடைக்கு வார பொம்பளையால் கிட்ட பல்ல கெஞ்சுர சராசரி ஆளுதான்.. எதோ ஒரு நல்ல நாள்ல தான் என்னையும் இங்க அனுப்பி வெச்ச்சான்.
பரபரப்பு முடிஞ்சு, வீட்டுக்குள்ள வந்தாச்சு. புதுசு, பேரு ப்ரீத்தி யாம்.. நல்ல பவுச தான் இருந்தா!.. வரும் போதே மிக்ஸி, தட்டு முட்டு சாமான்னு தான் வந்துருக்கா .. இனி, நம்மள யாரு கவனிக்க போறா? வந்தவ, அப்டியே மடிப்பு கலையாம இல்ல இருக்கா?, அடுப்பங்கரைக்கு வந்தா, நெருப்புல வெந்து தான ஆவோனும்.. இவ மட்டும் என்னவோ அப்டியே தள்ளியே நிக்குற.. யாரது சொல்லனுமா என்ன?
நாலாம் வந்தன்னைக்கே, இந்த ஓட்டு பெரிய மனுசி, மொத மொத சமைக்கிறோம்ன்னு கேசரி செஞ்சா. நல்ல பக்குவமா வேகவச்ச்சு, தொண்டை குளிக்குள வழுக்கிட்டு போற மாறி இல்ல செஞ்சேன். அன்னைலேந்து, இப்போ வரைக்கும் நா தான் இந்த வீட்டுல எல்லாம். ஏன், இவங்க புள்ள, புல்லை பெத்துட்டு வந்தப்போ , "பச்ச உடம்புக்காரி, பால் சுரக்கனும், சத்தா இருக்கணும்னு, கருவாடும் கறியும் ஆக்கி கொடுத்தனே.. எல்லாம் மறந்து போச்சு.. நன்றி கேட்ட மனுசங்க..
இந்த வீட்ல நா வந்த சமயம்லாம், ரொம்ப வறுமை... விறகுஅடுப்புல தான் சமையல்.. அந்த நெருப்பும் பொ கையும் பழக்கிட்டு, இவங்களுக்காகவே தான என் அழகையும் கூட கவனிக்கல. அதெல்லாம் ஒரு காலம். நா முதலியார் கடைல இருக்கும்போதெல்லாம், வர்றவங்க என்ன ஒரு முறை திரும்பி பார்க்காம போனதே இல்ல.. ஒருமுறை யாவது என்ன தொட்டுறக்கூடாதான்னு ஏங்கின எத்தனை பேர நா சொல்ல?.. ஆனா, அந்த அழகு எல்லாத்தையும், இந்த அடுப்படிலேயே கழிச்சு கழிச்சு இன்னைக்கு கருப்பா, சொர சொறன்னு வனப்பு இல்லாம இருக்கேன்.. தீண்ட ஆளில்லாம கெடக்கரேன். அழக மட்டுமா தொலச்சன்.. இவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் நானும் இல்ல பட்டேன். கூட சேந்து பாடுபடல? இதுக்கெல்லாம் செய்யுற கைமாறா இது?.. "காசு வந்தா, கஷ்டம் தெரியாது.. கூட ஒழைச்சவங்க தெரியாது"னு சொல்றது சரியா தான் இருக்கு.
இன்னைக்கு, இந்த ப்ரீத்திய தலைல தூக்கி வெச்ச்சு ஆடுற அம்மாக்கு ஆறுதலா எத்தனை முறை இருந்துருக்கேன். புருஷன் அடிச்சதையும் மிதிச்சதையும் பசங்க கிட்ட சொல்லமுடியுமா, என்கிட்டே வந்து.. சமசிச்சுட்டேயே எத்தனை முறை அழுதுறுப்பா? ஒரு வார்த்தை, வெளிய சொல்லிருப்பனா? இவங்க அக்காவும் இவங்களும் பேசின ரகசியத்தைத்தான் வெளிய சொல்லிருப்பேனா? இந்தம்மா அழறப்பலாம் எத்தனை முறை, அந்த கண்ணு தண்ணிய நான் பொசுக்கிருப்பன்.. எப்படி மறந்தாங்க என்ன? சத்தா சமைக்கணும்னு என்னை கூப்டபோலாம், எத்தனை ஆசையா அந்த ஈரல் வறுவல் செஞ்சு தந்தேன்.. வசதி வரவும் என்னை ஒதுக்க ஒதுக்க,, என்னால தாங்கிக்கவே முடில... என் அத்தனை அழகையும் வனப்பையும் இந்த ஆண்டவன் எனக்கு திருப்பி தரக்கூடாதா?.. தவறவிட்ட என் வாழ்க்கையை நா திரும்ப வாழக்கூடாது?
நாள் கிழமைனு, எல்லா பூஜை புனஸ்காரத்துக்கு தேவையான பிரசாதம் லாம் செஞ்சு தந்தேனே.. அதும் நா பண்ணின சுண்டல் தாளிப்புனா, இந்த வீடு பெரியவருக்கு அத்தனை இஷ்டம். நல்ல நெறைய சாப்பிடுவாரு. ஆனா என்னை ஒரு முறை கூட அவர் கூப்டதும் இல்ல பேசியதும் இல்ல.. அவருக்கு எல்லாம் இந்த அம்மா தான்.. பாத்து பாத்து சமைக்குறதுல இருந்து, சாப்புட்டு, தண்ணி குடிச்ச்சு மாத்திரை முழுங்குற வரை இந்தம்மா தான் கவனிப்பாங்க.. நா இருக்கேனான்னு எட்டி பாத்தது கூட இல்ல.. ஏன்? பக்கத்து வீட்ல வந்து, விசேஷத்துக்கு சமைக்க கூட, என்ன அந்தம்மா கிட்ட கேட்டுட்டு அனுப்ப சொல்லுவாங்க.. போன நா, திரும்பவருவனான்னு ஒருத்தரும் கவலைப்பட்டது கூட இல்ல.. இந்த வீடு குட்டிப்பையன் கூட தான் வருவேன்.. வந்தா, அதே தான்..அதே அடுப்பங்கரை..
இதோ இதோ , வந்துட்டா அந்தம்மா.. நா உங்ககிட்ட பொலம்பினதா சொல்ராதிங்க.. இவங்க தான் என்ன ஒதுக்குறாங்க, இப்போ வந்தவளாச்சும் நம்ம கிட்ட பேசுவாளான்னு பாத்தா.. அப்டியே ஒட்டியும் ஒட்டாமையும் இல்ல இருக்கா.. அவளா பேசினா தான் பேசணும்னு வைராக்யத்தோட இருக்கேன். பாக்கலாம் அப்டி என்ன தான் சமைகிச்சு இவங்கள அசத்தப்போறானு.. ஹ்ஹம்ம்ம்... புதுசு புதுசா, வாயில நொலையாத அயிட்டமா சமைக்குரா.. அன்னைக்கு என்னமோ செஞ்சாலே.. ஹ்ம்ம், பட்டர் சிக்கன்.. அடேங்கப்பா... ரெண்டு நாள் அவ மேலயே அந்த வாசம் இருந்துச்ச. வந்த ஒரே வாரத்துலயே பெருசுல இருந்து சிறுசு வரைக்கும், வலச்சு போட்டுட்டா. எதோ ஆரோக்கியமா சமைக்குறாலாம்.. எண்ணெய் இல்லாமையே அசத்துறாளாம். மொறுகலா தோசை சுடுறாளாம்... சமைக்குறதே தெரிலயாம்.. இந்தம்மா, பக்கத்துக்கு வீட்டு பவளத்தகிட்ட பெருமை பீத்திட்ருந்தாங்க.. எல்லாம் ஆட்டம்...
கொஞ்ச நாள் இருக்கும்.. எல்லாம் அவசரம் அவசரமா வீடு பெரியவரை தூக்கிகிட்டு, ஆஸ்பத்திரி போனாங்க.. அவருக்கு ரத்த கொதிப்பாம்.. எனக்கு என்ன பண்றதுனே தெரில.. புடிச்சு வெச்ச சிலை மாறி ஒக்காந்துட்டே இருக்கேன். நகர முடில.. அந்த பெரியவருக்கு ஏதும் ஆயிடக்கூடாதுனு மனசார வேண்டிகிட்டேன்.
"இல்லக்கா, இப்போ நல்லாருக்காரு..புதுசு புதுசா பன்னீர் சிக்கென்னு சாப்புட்றது.. அப்புறம் வல்லு வல்லுனு விழுந்தா.. யாருக்கு தான் பிரஷர் வராது, இந்த மனுசனுக்கு பாத்து பாத்து கவனிச்சு, என்ன சுகத்த கண்டோம்? கருமம்.. நம்ம பொழப்பு அப்டி.. அம்மா காலத்துல இருந்து, இப்போ வரை.. அழுதே சாவணும்னு தலையெழுத்து" என்று அவங்க அக்கா கிட்ட அழுதுட்டு இருக்க
"செல்வி, டீ கொண்டு வா"னு சத்தம் கேட்டு, சட்டுனு போன வெச்சுட்டு அடுப்படிக்கு வந்தாங்க. டீ வெச்ச்சு குடுத்துட்டு, மறுபடி அவங்க அக்கா கிட்ட போன் பேச ஆரமிச்சாச்சு.
"காலைல கோதுமை தோசை ஊத்தி, சட்னி அரைச்சேன்.. மதியானதுக்கு கீரை சுண்டி, ரசம் வைக்கலானு இருக்கேன்.. சத்தா சாப்பிடட்டும்! சரிக்கா நா வைக்குரேன்" னு சொல்லிட்டு, கவலையோடு எனன தேடி வந்து, அந்த கரித்துணிய எடுத்து தொடச்ச்சுட்டு, அடுப்புல வச்சு என்னை ஊத்தி தாளிக்க..என்னனு சொல்லுவேன்?... சந்தோஷத்துல.. எள்ளும் கொள்ளுமா கடுகு தெரிச்சேன்..
சும்மாவா? நான், இந்த வீடு, இந்த வீட்டு ஆளுங்க.. இவங்க கிட்ட இருந்து.. என்னை பிரிக்கவே முடியாது.. என் குடும்பம் இது..
"ப்ரீத்தியா? தோ, வந்த பெட்டிலயே கட்டிப்போட்டு, பரண் மேல கடக்குறா... அவ கூட வந்த மிக்ஸி மட்டும் இப்போ வேலை செஞ்சுட்டு இருக்கு.. பிரீயா வந்த நாண் ச்டிக் கடாயும் நானும் ஒண்ணா? "
-இப்படிக்கு இரும்புச்சட்டி